Old/New Testament
10 முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தப் பெயர்கள் இருந்தன:
ஆளுநரான நெகேமியா, அகலியாவின் மகன் சிதேக்கியா, 2 செராயா, அசரியா, எரேமியா, 3 பஸ்கூர், அமரியா, மல்கிஜா, 4 அத்தூஸ், செபனியா, மல்லூக், 5 ஆரீம், மெரெமோத், ஒபதியா, 6 தானியேல், கிநேதோன், பாருக், 7 மெசுல்லாம், அபியா, மீயாமின், 8 மாசியா, பில்காய், செமாயா எனும் ஆசாரியர்களும் தங்கள் கையெழுத்தை முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இட்டனர்.
9 முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள லேவியர்களின் பெயர்கள்:
அசனியாவின் மகனான யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவரான பின்னூயி, கத்மியேல் ஆகியோர், 10 அவர்களில் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், 11 மீகா, ரேகாப், அசபியா, 12 சக்கூர், செரெபியா, செபனியா, 13 ஒதியா, பானி, பெனினு ஆகியோர்.
14 முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள ஜனங்கள் தலைவர்களின் பெயர்கள்:
பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி, 15 புன்னி, அஸ்காத், பெபாயி, 16 அதோனியா, பிக்வாய், ஆதின், 17 ஆதேர், இஸ்கியா, அசூர், 18 ஒதியா, ஆசூம், பெத்சாய், 19 ஆரீப், ஆனதோத், நெபாய், 20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், 21 மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, 22 பெலத்தியா, ஆனான், ஆனாயா, 23 ஓசெயா, அனனியா, அசூப், 24 அல்லோ, கேஸ், பிலகா, சோபேக், 25 ரேகூம், அஷபனா, மாசெயா, 26 அகியா, கானான், ஆனான், 27 மல்லூக், ஆரிம், பானா ஆகியோர்.
28-29 எனவே இந்த ஜனங்கள் அனைவரும் தேவனிடம் இந்த விசேஷ வாக்குறுதியை அளித்தனர். அவர்கள் வாக்குறுதியைக் கடைபிடிக்காவிட்டால் தீமைகள் வரட்டும் என்று வேண்டினர். தேவனுடைய சட்டத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று ஜனங்கள் அனைவரும் வாக்குறுதிச் செய்தனர். தேவனுடைய சட்டம் அவரது தாசனாகிய மோசேயின் மூலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஜனங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளையும், சகல விதிகளையும், போதனைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று வாக்குறுதிக் கொடுத்தனர். இப்பொழுது வாக்குறுதிச் செய்துக்கொண்ட ஜனங்கள் இவர்கள்தான்: ஜனங்களில் மற்றவர்களான ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய ஊழியர்களும், தேவனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்காக மற்ற ஜனங்களிடமிருந்து தங்களை பிரித்துக்கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இருந்தனர். அவர்கள் மனைவிகளும் அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களுமாகிய அனைவரும் கவனித்து புரிந்துகொள்பவர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் முக்கியமானவர்களோடு சேர்ந்துக்கொண்டு தேவனுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிய ஒப்புக்கொள்ள வைத்தனர். தேவனுடைய சட்டத்திற்கு கீழ்ப்படியாவிட்டால் தமக்குத் தீமைகள் ஏற்படட்டும் என்ற சாபத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
30 அவர்கள், “எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் மகன்களுக்கு எங்கள் மகள்களை கொடுக்கமாட்டோம். எங்கள் மகன்களுக்கு எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் மகள்களைக் கொள்ளமாட்டோம்” என்று வாக்குறுதிச் செய்தனர்.
31 “நாங்கள் ஓய்வுநாளில் வேலைச் செய்யமாட்டோம். எங்களைச் சுற்றியிருப்பவர்கள் அந்நாளில் தானியங்களையோ மற்ற பொருட்களையோ கொண்டுவந்து விற்றால் நாங்கள் அவற்றை அச்சிறப்பான நாளிலும் மற்ற ஓய்வுநாட்களிலும் வாங்கமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், நாங்கள் எங்கள் பூமியில் நாத்து நடுதல் அல்லது வேறு வேலைகளைச் செய்யமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், மற்றவர்கள் எங்களுக்குத் தர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்வோம்.
32 “நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டளைக்குப் கீழ்ப்படிவோம். எங்கள் தேவனை மகிமைப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்து ஆலயபணிக்கு உதவுவோம். 33 இப்பணமானது ஆசாரியர்கள் ஆலயத்தில் மேஜையின் மேல் வைக்கும் விசேஷ ரொட்டிக்கும் சமூகத்தப்பங்களுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தானியக் காணிக்கைக்கும், தகனப்பலிக்கும் கொடுக்கப்படும். ஓய்வுநாட்களிலும், பிறைச் சந்திர நாட்களிலும் மற்றும் சிறப்புக் கூட்டங்களிலும் செலுத்தும் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தேவாலயத்திற்குத் தேவைப்படும் எவ்வித வேலைகளுக்கும் கொடுக்கப்படும்.
34 “ஆசாரியரும் லேவியர்களும் ஜனங்களுமாகிய நாங்கள் சீட்டுப்போட்டோம். ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் நமது தேவனுடைய ஆலயத்திற்கு எந்தக் குடும்பத்தார் விறகை அன்பளிப்பாக கொண்டுவரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு விரும்பினர். நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தில் விறகானது பலிபீடத்தில் எரிக்கப்பட்டது. சட்டத்தில் எழுதப்பட்டபடி நாம் செய்ய வேண்டும்.
35 “நாம் நமது அறுவடையில் கிடைக்கும் ஒவ்வொரு பழ மரங்களில் முதற்கனிகளையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அப்பழங்களை கர்த்தருடைய ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவருவோம்.
36 “சட்டத்தில் எழுதியுள்ளபடி நாம் செய்ய வேண்டியது இதுதான்: எங்கள் மகன்களில் முதல் மகன்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகங்களில் முதலில் பிறந்தவைகளையும் நாங்கள் கொண்டு வருவோம். நாங்கள் முதலில் பிறந்தவற்றை எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குள் கொண்டுவருவோம், அங்கே ஊழியஞ் செய்கிற ஆசாரியர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கொண்டுவருவோம்.
37 “நாங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சேமிப்பு அறைகளுக்கு ஆசாரியர்களிடம் இவற்றைக் கொண்டு வருவோம்: எங்கள் பிசைந்த மாவில் முதல் பாகத்தையும், எங்களது முதல் தானியக் காணிக்கைகளையும், எங்களது அனைத்து மரங்களிலிருந்து முதல் பழங்களையும், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெயின் முதல் பாகத்தையும் கொண்டு வருவோம். அதோடு எங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தை லேவியர்களுக்குக் கொண்டு வருவோம். ஏனென்றால் நாம் வேலைச் செய்கிற எல்லா பட்டணங்களிலும் லேவியர்கள் அவற்றைச் சேகரித்தனர். 38 அவர்கள் விளைச்சலைப் பெறும்போது லேவியர்களோடு ஆரோனின் குடும்பத்திலுள்ள ஒரு ஆசாரியர் இருக்கவேண்டும். பிறகு லேவியர்கள் அப்பொருட்களை எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும். பிறகு அவர்கள் ஆலய கருவூலத்தில் அவற்றை போடவேண்டும். 39 இஸ்ரவேல் ஜனங்களும் லேவியர்களும் அவர்களின் அன்பளிப்புகளைச் சேமிப்பு அறைகளுக்குக் கொண்டுவரவேண்டும். அவர்கள் தமது தானியம், புதிய திராட்சைரசம் எண்ணெய் ஆகிய அன்பளிப்புகளைக் கொண்டுவருவார்கள். ஆலயத்திற்குரிய அனைத்துப் பொருட்களும் அச்சேமிப்பு அறைகளில் வைக்கப்படும். அங்கே பணியிலுள்ள ஆசாரியர்கள் தங்குவார்கள், பாடகர்களும், வாசல் காவலாளர்களும் அங்கே தங்குவார்கள்.
“எங்கள் தேவனுடைய ஆலயத்தின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று நாங்கள் அனைவரும் வாக்குக்கொடுக்கிறோம்” என்றனர்.
புதிய மக்கள் எருசலேமிற்குள் நுழைகின்றனர்
11 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் இப்பொழுது எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் இனி நகரத்திற்குள் யார் நுழையவேண்டும் என்று முடிவெடுத்தனர். எனவே அவர்கள் சீட்டு குலுக்கிப்போட்டனர். தங்களுக்குள் பத்து பேரில் ஒருவனைப் பரிசுத்த நகரமான எருசலேமில் வாழவைத்தனர். மற்ற ஒன்பது பேர் அவர்களது சொந்தப் பட்டணங்களில் வாழ முடிந்தது. 2 சில ஜனங்கள் எருசலேமில் குடியிருக்கத் தாமாகவே முன்வந்தனர். மற்ற ஜனங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினர்.
3 எருசலேமில் குடியிருந்த தலைவர்கள் இத்தகையவர்கள். (இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் ஆசாரியர்கள், லேவியர்கள், ஆலயப் பணியாளர்கள், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர். இவர்கள் யூதாவின் நகரங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான வெவ்வேறு பட்டணங்களில் வாழ்ந்தனர். 4 எருசலேம் நகரத்தில் யூதா மற்றும் பென்யமீன் குடும்பத்தினரில் மற்ற ஜனங்கள் வாழ்ந்தனர்).
யூதாவின் சந்ததியினர் இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்தனர்.
உசியாவின் மகனான அத்தாயாவும், (உசியா சகரியாவின் மகன், அவன் அமரியாவின் மகன், அவன் செபதியாவின் மகன், அவன் மகலாலெயேலின் மகன், அவன் பேரேசின் சந்ததியில் ஒருவன்). 5 பாருக்கின் மகனான மாசெயாவும், (பாருக் கொல்லோசேயின் மகன், அசாயாவின் மகன் கொல்லோசே, அதாயாவின் மகன் அசாயா, யோயாரிப்புவின் மகன் அதாயா. யோயாரிப்பு சகரியாவுக்கு மகன் அவன் சீலோனின் சந்ததியில் ஒருவன்). 6 எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.
7 இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த பென்யமீனின் சந்ததியினர்:
மெசுல்லாமின் மகனான சல்லூ (மெசுல்லாம் யோயத்தின் மகன், இவன் பெதாயாவுக்கு மகன், இவன் கொலாயாவுக்கு மகன், இவன் மாசெயாவுக்கு மகன், இவன் இதியேலுக்கு மகன், இவன் எசாயாவுக்கு மகன்) 8 எசாயாவைப் பின்பற்றியவர்கள் கப்பாய், சல்லாய் ஆகியோர் அவர்கள் அனைவரும் சேர்ந்து 928 பேர். 9 அவர்களுக்கு சிக்ரியின் மகன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் மகனான யூதா பொறுப்பாளனாக இருந்தான்.
10 இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்:
யோயாரிப், யாகின் மகன். 11 இல்க்கியாவின் மகனான செராயா (இல்க்கியா மெசுல்லாமின் மகன், அவன் சாதோக்கின் மகன், அவன் மொராயோத்தின் மகன், அவன் அகிதூபின் மகன், இவன் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளன்.) 12 சகோதரர்களாகிய 822 பேர் ஆலயத்தில் பணிவிடைச் செய்தனர். எரோகாமுக்கு மகனான அதாயாவும் (எரோகாம் பெல்லியாவின் மகன், அவன் அம்சியின் மகன், அவன் சகரியாவின் மகன், அவன் பஸ்கூரின் மகன், அவன் மல்கியாவின் மகன்). 13 மல்கியாவின் சகோதரர்களான 242 பேர் (இவர்கள் அவர்களது குடும்பத் தலைவர்கள்.) அசரியேலின் மகனான அமாசாயும் (அசரியேல் அகெசாயின் மகன், அவன் மெசில்லேமோத்தின் மகன், அவன் இம்மோரின் மகன்.) 14 இம்மோரின் சகோதரர்களான 128 பேர். (இவர்கள் தைரியமான வீரர்கள். இவர்களின் அதிகாரியாக அகெதோலிமின் மகனான சப்தியேல் இருந்தான்.)
15 எருசலேமிற்குள் நுழைந்த லேவியர்கள் இவர்கள்:
அசூபின் மகனான செமாயா (அசூப் அஸ்ரிக்காமின் மகன், அவன் அசபியாவின் மகன், அவன் புன்னியின் மகன்.) 16 சபெதாயும், யோசபாத்தும் (இவ்விருவரும் லேவியர்களின் தலைவர்கள் தேவாலயத்தின் வெளிவேலைகளின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.) 17 மத்தனியா (மத்தனியா மீகாவின் மகன். அவன் சப்தியின் மகன். அவன் ஆசாபின் மகன். அவன் பாடகர்கள் குழுவுக்கு இயக்குனர். ஜெபத்தில் துதிப்பாடலை பாட ஜனங்களை வழிநடத்தினான்.) பக்பூக்கியா (பக்பூக்கியா அவனது சகோதரனுக்கு மேல் இரண்டாவது பொறுப்பாளனாக இருந்தான்.) சமுவாவின் மகனான அப்தா (சம்முவா, கலாலின் மகன் அவன் எதுத்தூனின் மகன்). 18 எனவே 284 லேவியர்கள் பரிசுத்த நகரமான எருசலேமிற்குள் நுழைந்தனர்.
19 எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்:
அக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர்.
20 மற்ற இஸ்ரவேல் ஜனங்கள், மற்ற ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தனர். ஒவ்வொருவனும் தனது முற்பிதாவிற்குச் சொந்தமான நாட்டில் வாழ்ந்தனர். 21 ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும், கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள்.
22 எருசலேமில் லேவியர்களின் அதிகாரியாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகனாக இருந்தான். (பான் அசபியாவின் மகனாக இருந்தான், அவன் மத்தானியாவின் மகனாக இருந்தான், அவன் மீகாவின் மகனாக இருந்தான்.) ஊசி ஆசாபின் சந்ததியான். ஆசாபின் சந்ததியினர் பாடகர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். 23 பாடகர்கள் அரசனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருந்தனர். அரசனிடமிருந்து வரும் ஆணைகள் அப்பாடகர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லின. 24 அரசன் செய்ய விரும்புவதை ஜனங்களிடம் சொல்பவனின் பெயர் பெத்தகியா. (பெத்தகியா மெசெசாபெயேலின் மகன். அவன் சேராக்கின் சந்ததியில் ஒருவன். சேராக் யூதாவின் மகன்.)
25 இப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், 27 ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதன் கிராமங்களிலும், 28 சிக்லாகிலும், மேகோனாகிலும் அதன் கிராமங்களிலும் 29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும், 30 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவற்றின் கிராமங்களிலும், லாகீசிலும் அதன் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதன் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமீன் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
31 கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும், 32 ஆனதோத், நோப், அனனியா, 33 ஆத்சோர், ராமா, கித்தாயிம், 34 ஆதீத், செபோயிம், நெபலாத், 35 லோத், ஓனோ, என்னும் ஊர்களிலும், சிற்பிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர். 36 லேவியரிலோ சிலப் பிரிவினர் பென்யமீனிலும் இருந்தனர்.
யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்
4 பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். 2 பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். 3 யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். 4 ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.
5 மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். 6 அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். 7 எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
8 அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, 9 ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? 10 நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான்.
11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள்.
ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’ (A)
12 மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான்.
13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.
15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.
18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.
21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.
2008 by World Bible Translation Center