Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆமோஸ் 4-6

இன்பத்தை விரும்பும் பெண்கள்

சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே என்னைக் கவனியுங்கள். நீங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்கள் அந்த ஏழைகளை நசுக்குகிறீர்கள். நீங்கள் “எங்களுக்குக் குடிக்கக் கொஞ்சம் கொண்டு வாருங்கள்” என்று உங்கள் கணவர்களிடம் கூறுகிறீர்கள்.

கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி கொடுத்தார். அத்துன்பங்கள் உங்களுக்கு வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால் வாக்களித்தார். ஜனங்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அவர்கள் மீன் தூண்டிலைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள். உங்கள் நகரம் அழிக்கப்படும். பெண்கள் நகரச்சுவர்களிலுள்ள வெடிப்புகள் வழியே அவசரமாக வெளியேறி பிணக் குவியல்களின் மேல் விழுவார்கள்.

கர்த்தர் இவற்றை கூறுகிறார். “பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்! கில்காலுக்குப் போய் மேலும் பாவம் செய்யுங்கள். உங்களது பலிகளை காலை நேரத்தில் செலுத்துங்கள். மூன்று நாள் விடுமுறைக்கு உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டு வாருங்கள். புளித்த மாவுள்ள நன்றிக் காணிக்கையைக் கொடுங்கள். ஒவ்வொருவரிடமும் சுயசித்தக் காணிக்கைகளைப்பற்றிக் கூறுங்கள். இஸ்ரவேலே, அவற்றைச் செய்ய நீ விரும்புகிறாய். எனவே போய் அவற்றைச் செய்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.

“நான், உங்களை என்னிடம் வரச்செய்ய வேண்டுமென பலவற்றை முயற்சி செய்தேன். நான் நீங்கள் உண்ண எந்த உணவையும் தரவில்லை. உங்கள் நகரங்கள் எதிலும் உண்ண உணவு கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.

“நான் அறுவடைக்கு மூன்று மாதத்திற்கு முன்பு மழையையும் நிறுத்தினேன். எனவே விளைச்சல் விளையவில்லை. பிறகு நான் ஒரு நகரத்தில் மழை பெய்யும்படிச் செய்தேன். ஆனால் அடுத்த நகரில் மழை பெய்யவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் மழை பெய்தது. ஆனால் நாட்டின் அடுத்தப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது. எனவே இரண்டு அல்லது மூன்று நகரங்களிலுள்ள ஜனங்கள் அடுத்த நகருக்கு தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றனர். ஆனால் எல்லோருக்கும் அங்கு தண்ணீர் போதுமானதாக இல்லை. இருந்தாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.

“நான் உங்கள் விளைச்சலை வெப்பத்தாலும் நோயாலும் மரிக்கும்படிச் செய்தேன். நான் உங்களது தோட்டங்களையும் திராட்சத் தோட்டங்களையும் அழித்தேன். உங்களது அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றன. ஆனாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.

10 “நான் எகிப்திற்குச் செய்ததுபோல உங்களுக்கு எதிராக வியாதிகளை அனுப்பினேன். நான் உங்களது இளைஞர்களை வாள்களால் கொன்றேன். நான் உங்கள் குதிரைகளை எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் பாளயம் பிணங்களால் துர்நாற்றம் வீசும்படி செய்தேன். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.

11 “நான் சோதோமையும் கொமோராவையும் அழித்ததுபோன்று உங்களை அழித்தேன். அந்நகரங்கள் முழுவதுமாக அழிந்தன. நீங்கள் நெருப்பிலிருந்து வெளியே இழுக்கப்பட்ட எரிந்த குச்சியைப் போன்றவர்கள். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.

12 “எனவே இஸ்ரவேலே, நான் இவற்றை உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, உனது தேவனை சந்திக்கத் தயாராக இரு.”

13 நான் யார்? நானே மலைகளைப் படைத்தவர்.
    நான் உங்கள் இருதயங்களையும் உண்டாக்கினவர்.
    நான் ஜனங்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன்.
நான் இருளை விடியற் காலையாக மாற்றினேன்.
    நான் பூமியின் மேலுள்ள மலைகைளின் மேல் நடக்கிறேன்.
    நான் யார்? எனது நாமம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர்.

இஸ்ரவேலுக்கான சோகப்பாடல்

இஸ்ரவேல் ஜனங்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தச் மரணப் பாடல் உங்களைப் பற்றியதுதான்.

இஸ்ரவேல் கன்னி விழுந்தாள்.
    அவள் இனிமேல் எழமாட்டாள்.
அவள் தனியாக விடப்பட்டாள். புழுதியில் கிடக்கிறாள்.
    அவளைத் தூக்கிவிட எவருமில்லை.

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“1,000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள்,
    100 ஆட்களோடு திரும்பி வருவார்கள்,
100 ஆட்களோடு நகரை விட்டுப்போன
    அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.”

கர்த்தர் இஸ்ரவேலரைத் திரும்பிவர உற்சாகப்படுத்துகிறார்

கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்:
“என்னைத் தேடிவந்து, வாழுங்கள்.
    ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள்.
கில்காலுக்கும் போகாதீர்கள்.
    எல்லையைக் கடந்து பெயர்செபாவிற்குப் போகாதீர்கள்.
கில்காலிலுள்ள ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
    பெத்தேல் அழிக்கப்படும்.
கர்த்தரிடம் போய் வாழுங்கள்.
    நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும்.
    அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும்.
    பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது.
7-9 நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும்.
    தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார்.
அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார்.
    அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார்.
அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார்.
    அவரது நாமம் யேகோவா.
அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து
    இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.”

இஸ்ரவேலர்கள் செய்த பாவச்செயல்கள்

நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள்.
    நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள்.
10 தீர்க்கதரிசிகளே, பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள்.
    அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள்.
11 நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள்.
    நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள்.
நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள்.
    ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள்.
நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள்.
    ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள்.
12 ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன்.
நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.
    நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள்.
    நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள்.
    நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை.
13 அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள்.
    ஏனென்றால் இது கெட்ட நேரம்.
14 நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
    எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும்.
அப்போது நீங்கள் வாழ்வீர்கள்.
    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார்.
15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.
    வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள்.
பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
    யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார்.

பெருந்துக்க காலம் வந்து கொண்டிருக்கிறது

16 என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார்.
“ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள்.
    ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள்.
    ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்.
17 ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள்.
    ஏனென்றால் நான் அவ்வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் கூறினார்.
18 உங்களில் சிலர்
    கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள்.
நீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்?
    கர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும்.
19 நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன்,
    கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள்.
நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத்
    தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது.
    பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள்.
20 கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும்.
    அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும்.
    அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும்.

இஸ்ரவேலின் தொழுதுகெள்ளுதலை கர்த்தர் ஏற்க மறுக்கிறார்

21 “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன்.
    நான் அவற்றை ஏற்கமாட்டேன்.
    நான் உங்கள் ஆன்மீகக் கூட்டங்களால் மகிழவில்லை.
22 நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும்
    நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
நீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள
    கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூடமாட்டேன்.
23 நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள்.
    நான் உங்கள் வீணைகளில் வரும் இசையைக் கேட்கமாட்டேன்.
24 நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும்.
    நன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும்.
25 இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும்
    காணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள்.
26 ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள்.
    நீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர்கள்.
27 எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால்
    சிறையாகச் செல்லச் செய்வேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவன்.

இஸ்ரவேலிலிருந்து நல்ல காலங்கள் அகற்றப்படும்

சீயோனில் வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு
    சமாரியா மலையில் மிகவும் பாதுகாப்பு இருப்பதாக எண்ணும் ஜனங்களே, உங்களுக்கு மிகுந்த கேடு வரும்.
நீங்கள் மிக முக்கியமான நாட்டின் முக்கியமான தலைவர்கள். “இஸ்ரவேல் வீட்டார்”
    உங்களிடம் ஆலோசனைக்காக வருகிறார்கள்.
கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள்.
    அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள்.
    பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள்.
நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா?
    இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா?
நீங்கள் அந்தத் தண்டனை தரும் நாளை நோக்கி விரைகிறீர்கள்.
    அந்த வன்முறை ஆட்சியை மிகவும் பக்கத்தில் கொண்டு வருகிறீர்கள்.
ஆனால் இப்போது, நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறீர்கள்.
    நீங்கள் தந்தக் கட்டில்களில் படுக்கிறீர்கள்.
நீங்கள் மஞ்சங்களில் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறீர்கள்.
    நீங்கள் மந்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் ஆட்டுக்குட்டிகளையும் மாட்டுத் தொழுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுக் குட்டிகளையும் உண்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் வீணைகளை மீட்டுகிறீர்கள்.
    தாவீதைப் போன்று உங்கள் இசைக் கருவிகளில் பயிற்சி செய்கிறீர்கள்.
நீங்கள் அழகான கிண்ணங்களில் மது குடிக்கிறீர்கள்.
    நீங்கள் சிறந்த மணப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள்.
யோசேப்பின் குடும்பம் அழிக்கப்படுவதைக் கண்டு
    கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்.

அந்த ஜனங்கள் இப்பொழுது மஞ்சங்களில் வசதியாகப் படுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நல்ல நேரங்கள் முடிவடையும். அவர்கள் அந்நிய நாட்டுக்குக் கைதிகளைப்போன்று கொண்டுசெல்லப்படுவார்கள். எடுத்துக்கெள்ளப்படுகிறவர்களில் இவர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது சொந்த நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி கொடுத்தார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இந்த வாக்குறுதியை அளித்தார்.

“நான், யாக்கோபு பெருமைக்கொள்கிற காரியங்களை வெறுக்கிறேன்.
    நான் அவனது பலமுள்ள கோபுரங்களை வெறுக்கிறேன்.
எனவே நான் பகைவன் இந்த நகரத்தையும்
    அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள விடுவேன்.”

கொஞ்சம் இஸ்ரவேலர்களே உயிரோடு விடப்படுவர்

அப்போது, சில வீடுகளில் பத்துபேர் உயிர் பிழைக்கலாம், ஆனால் அவர்களும் மரித்துப்போவார்கள். 10 ஒருவன் மரிக்கும் போது ஒரு உறவினன் வந்து உடலைப் பெற்று வெளியே எடுத்துக்கொண்டு எரிக்க வருவான். உறவினன், எலும்பை வெளியே கொண்டுபோக வருவான். வீட்டின் உட்புறத்திலே மறைந்திருக்கிற யாரையாவது அழைப்பான்.

“உன்னோடு வேறு மரித்த உடல்கள் உள்ளனவா?” என்று கேட்பான். அந்த மனிதன், “இல்லை” என்று பதில் சொல்லுவான். ஆனால் அந்த உறவினன், “நீ மௌனமாயிரு! நாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக் கூடாது” என்று சொல்வான்.

11 பார், தேவனாகிய கர்த்தர் கட்டளை கொடுப்பார்.
    பெரிய வீடுகள் துண்டுகளாக உடைக்கப்படும்.
    சிறிய வீடுகள் சிறிய துண்டுகளாக உடைக்கப்படும்.
12 ஜனங்கள் குதிரைகளைத் தளர்ந்த பாறைகளின் மேல் ஓடும்படிச் செய்வார்களா? இல்லை.
    ஜனங்கள் பசுக்களைப் உழுவதற்கு பயன்படுத்துவார்களா? இல்லை.
ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தலை கீழாகத் திருப்பினீர்கள்.
    நீங்கள் நன்மையையும் நேர்மையையும் விஷமாக மாற்றினீர்கள்.
13 நீங்கள் லோடேபரில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
    நீங்கள், “நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் கர்ணாயீமை எடுத்துக் கொண்டோம்” என்று சொல்கிறீர்கள்.

14 “ஆனால் இஸ்ரவேலே, நான் உங்களுக்கு எதிராக ஒரு நாட்டைக் கொண்டு வருவேன். அந்நாடு உன் முழு நாட்டுக்கும் அது லெபோ ஆமாத் முதல் அரபா ஓடைவரை துன்பங்களைக் கொண்டுவரும்.” சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறினார்.

வெளி 7

1,44,000 இஸ்ரவேல் மக்கள்

அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர். பிறகு கிழக்குத் திசையில் இருந்து ஒரு தேவதூதன் வருவதைக் கண்டேன். அவனிடம் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல் இருந்தது. அந்தத் தூதன் உரத்த குரலில் ஏனைய நான்கு தூதர்களையும் அழைத்தான். அந்த நான்கு தூதர்களுக்கும் தேவன் பூமியையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தைக் கொடுத்திருந்தார். அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான்.

பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.

யூதா குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

ரூபன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

காத் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

ஆசேர் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

நப்தலி குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

மனாசே குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

சிமியோன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

லேவி குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

இசக்கார் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

செபுலோன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

யோசேப்பு குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

பென்யமீன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

பெருங்கூட்டம்

பிறகு நான் பார்த்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். ஒரு மனிதனால் எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சகல நாடுகளிலும், பழங்குடிகளிலும், இனங்களிலும், மொழிகளிலும், இருந்து வந்தவர்கள். அவர்கள் சிம்மாசனத்தின் முன்னும், ஆட்டுக்குட்டியானவர் முன்னும் நின்றனர். அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர். 10 அவர்கள் உரத்த குரலில் “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் நம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் வெற்றி உரியது!” என்று குரல் எழுப்பினர்.

11 அங்கே நான்கு உயிருள்ள ஜீவன்களும் மூப்பர்களும் இருந்தனர். அவர்களையும் சிம்மாசனத்தையும் சுற்றி தேவ தூதர்கள் நின்றனர். அவர்கள் தலைகுனிந்து பணிவுடன் வழிபட்டார்கள். 12 அவர்கள், “ஆமென்! எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக! ஆமென்” என்றனர்.

13 பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.

14 அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன்.

அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து [a] உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். 15 எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். 16 இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. 17 சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center