Old/New Testament
5 “மனுபுத்திரனே, நகரத்தின்மேல் உனது தாக்குதலுக்குப் பிறகு, நீ இவற்றைச் செய்ய வேண்டும். நீ கூர்மையான ஒரு வாளை எடுத்துக்கொள். அதனை சவரகனின் கத்தியைப்போன்று பயன்படுத்தி உனது முடியையும் தாடியையும் மழித்துவிடு. மழித்த முடியைத் தராசில்போட்டு நிறுத்துப்பார். உனது முடியை சமமான மூன்று பாகங்களாகப் பிரி, அதில் மூன்றில் ஒரு பாகத்தை நகரத்தின் (செங்கல்) மேல் வை, அந்நகரத்தில் முடியை எரி. சில ஜனங்கள் நகரத்திற்குள் மரிப்பார்கள் என்பதை இது காட்டும். பிறகு வாளைப் பயன்படுத்தி மூன்றில் ஒரு பாகமுள்ள முடியைச் சிறு துண்டுகளாக வெட்டு. அவற்றை நகரைச் (செங்கல்) சுற்றிலும் போடு. இது, சில ஜனங்கள் நகரத்திற்கு வெளியே மரிப்பார்கள் என்பதைக் காட்டும். பிறகு மூன்றில் ஒரு பங்கு முடியைக் காற்றில் தூவு. காற்று அவற்றைப் பரவலாக்கட்டும். நான் என் வாளை வெளியிலெடுத்து அந்த ஜனங்களுள் சிலரைப் பிற தூர நாடுகளுக்குத் துரத்துவேன் என்பதை இது காட்டும். 3 ஆனால் பிறகு, நீ போய் சில முடிகளை எடுத்து வரவேண்டும். அவற்றை உன்மேல் சட்டையில் சுற்றிவைத்துப் பாதுகாக்கவேண்டும். நான் என் ஜனங்கள் சிலரைக் காப்பாற்றுவேன் என்பதை இது காட்டும். 4 பிறகு பறந்துபோன இன்னும் கொஞ்சம் முடியை எடுத்து வரவேண்டும். அவற்றை நெருப்பில் போடவேண்டும். அங்கு நெருப்பொன்று எரிய ஆரம்பித்து இஸ்ரவேல் வீடு முழுவதையும் அழிக்கும் என்பதை இது காட்டுகிறது.”
5 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; “அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன. 6 எருசலேம் ஜனங்கள் எனது கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் மற்ற நாடுகளைவிட மோசமாக இருக்கின்றனர்! அவர்களைச் சுற்றியுள்ள நாட்டிலுள்ளவர்களைவிட அவர்கள் எனது பெரும்பாலான சட்டங்களை மீறிவிட்டனர். எனது கட்டளைகளைக் கேட்கவும், சட்டங்களுக்கு அடிபணியவும் மறுத்துவிட்டனர்.”
7 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “நான் உனக்குப் பயங்கரமானவற்றைச் செய்வேன்; ஏனென்றால், நீ எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. நீ எனது கட்டளைகளுக்கு அடிபணியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களை விட நீ எனது சட்டங்களை அதிகமாக மீறினாய்! உன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் தவறு என கருதும் குற்றங்களையும் கூட நீ செய்தாய்!” 8 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எனவே இப்பொழுது, நானும்கூட உனக்கு எதிரானேன்! மற்ற ஜனங்கள் பார்க்கும்படி நான் உன்னைத் தண்டிப்பேன். 9 நான் இதற்கு முன்னால் செய்யாதவற்றை உனக்குச் செய்வேன். நான் பயங்கரமானவற்றை மீண்டும் செய்யமாட்டேன்! ஏனென்றால், நீ ஏராளமான கொடூரமானச் செயல்களைச் செய்தாய். 10 பெற்றோர் தம் குழந்தைகளைத் தின்பார்கள். அத்தகைய பசியில் எருசலேம் ஜனங்கள் இருப்பார்கள். பிள்ளைகளும் தம் சொந்த பெற்றோர்களைத் தின்பார்கள். நான் உன்னைப் பல வழிகளில் தண்டிப்பேன்! மீதி வாழ்கிற ஜனங்களை நான் காற்றிலே தூவுவேன்.”
11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எருசலேமே, நான் உன்னைத் தண்டிப்பேன் என்று என் உயிரின்மேல் சத்தியம் செய்கிறேன். ஏனென்றால், எனது பரிசுத்தமான இடத்தில் நீ கொடூரமான செயலைச் செய்தாய். அதனைத் தீட்டுப்படுத்துமாறு நீ அருவருப்பான செயல்களைச் செய்தாய்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னிடம் இரக்கம்கொள்ளமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். 12 உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்குள் பசியாலும், கொள்ளைநோயாலும் மரிப்பார்கள். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்கு வெளியில் போரில் மரிப்பார்கள். உனது ஜனங்களில் பங்கினரை எனது வாளை வெளியிலெடுத்து அவர்களை தூரதேசங்களுக்கு விரட்டுவேன். 13 அதற்குப் பிறகுதான் நான் உங்கள் மீதுள்ள கோபத்தை நிறுத்துவேன். அவர்கள் எனக்குச் செய்த தீமைகளுக்காகத் தண்டிக்கப்பட்டனர் என்று அறிவேன். நான் கர்த்தர், அவர்கள் மேலுள்ள ஆழ்ந்த அன்பினால் நான் அவர்களிடம் பேசினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
14 கர்த்தர் கூறினார்; “எருசலேமே, நான் உன்னை அழிப்பேன். நீ ஒன்றுமில்லாமல் வெறும் கற்களின் குவியலாவாய். உன்னைக் கடந்து செல்லும் ஜனங்கள் கேலிசெய்வார்கள். 15 உன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் உன்னைக் கேலிசெய்வார்கள். ஆனால் அவர்களுக்கு நீ ஒரு பாடமாக இருப்பாய். நான் கோபங்கொண்டு உன்னைத் தண்டித்துவிட்டதை அவர்கள் காண்பார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் உன்னை எச்சரித்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கர்த்தராகிய நான் சொன்னேன்! 16 உனக்கு பயங்கரமான பஞ்சத்தை அனுப்புவேன் என்று சொன்னேன். உன்னை அழிக்கக் கூடியவற்றை அனுப்புவேன் என்று நான் சொன்னேன். அப்பஞ்ச காலம் மீண்டும் மீண்டும் வரும். நான் உனக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நிறுத்திவிடுவேன் என்று சொன்னேன். 17 நான் பஞ்சகாலத்தின்போது உங்கள் குழந்தைகளைக் கொல்லும் காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன் என்று சொன்னேன். நகரம் முழுவதும் நோயும் சாவுமாக இருக்கும். அந்தப் பகை படை வீரர்களை உங்களோடு சண்டையிட அழைப்பேன். கர்த்தராகிய நான் உனக்கு இவையெல்லாம் நிகழும் என்று சொன்னேன், அவையெல்லாம் நடக்கும்!”
6 பின்னர் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார், “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மலைகளை நோக்கித் திரும்பு! எனக்காக அவற்றுக்கு எதிராகப் பேசு. 3 அம்மலைகளிடம் இவற்றைக் கூறு: ‘இஸ்ரவேலின் மலைகளே, எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இந்த மலைகளிடமும், குன்றுகளிடமும் மலைச்சந்துகளிடமும் பள்ளதாக்கிடமும் கூறுவது இதுதான். பாருங்கள்! தேவனாகிய நான், உனக்கு எதிராகச் சண்டையிட பகைவரைக் கொண்டுவருகிறேன். நான் உனது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். 4 உனது பலிபீடங்கள் துண்டு துண்டாக உடைக்கப்படும்! உனது நறுமணப் பீடங்கள் நொறுக்கப்படும்! நான் உனது மரித்த உடல்களை நரகலான சிலைகளுக்கு முன்னால் எறிவேன். 5 நான் இஸ்ரவேல் ஜனங்களின் மரித்த உடல்களை உங்களது நரகலான சிலைகளுக்கு முன்னால் போடுவேன். உங்களது பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைப் போடுவேன். 6 உங்களது ஜனங்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீமை ஏற்படும். அவர்களது நகரங்கள் கற்களின் குவியலாகும். அவர்களது மேடைகள் அழிக்கப்படும். ஏனென்றால், வழிபாட்டிற்குரிய அவ்விடங்கள் மீண்டும் பயன்படக் கூடாது. அப்பலிபீடங்கள் எல்லாம் அழிக்கப்படும். ஜனங்கள் நரகலான அச்சிலைகளை மீண்டும் வழிபடமாட்டார்கள். அச்சிலைகள் தகர்க்கப்படும். நீ செய்த அனைத்தும் அழிக்கப்படும்! 7 உங்கள் ஜனங்கள் கொல்லப்படுவார்கள். பிறகு, நான் கர்த்தர் என்று நீ அறிவாய்!’”
8 தேவன் கூறினார்: “ஆனால் நான் உங்கள் ஜனங்களில் சிலரைத் தப்பிக்க வைப்பேன், அவர்கள் கொஞ்சக் காலத்திற்கு வெளிநாட்டில் வாழ்வார்கள். அவர்களை வேறுநாடுகளில் சிதறி வாழும்படி நான் வற்புறுத்துவேன். 9 பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர். 10 ஆனால் நான்தான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! நான் சொன்னால் சொன்னபடி செய்வேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாத் தீமைகளுக்கும் நானே காரணம் என்பதை அறிவார்கள்.”
11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார், “உங்கள் கைகளைத் தட்டுங்கள், கால்களை உதையுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த கொடூரமான காரியங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்கள் நோயாலும் பசியாலும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய். அவர்கள் போரில் கொல்லப்படுவார்கள் என்று சொல். 12 தொலை தூரங்களில் ஜனங்கள் நோயால் மரிப்பார்கள். இந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். இந்நகரத்தில் மீதியாக தங்கும் ஜனங்கள் பட்டினியால் மரிப்பார்கள். பிறகுதான் நான் என் கோபத்தை நிறுத்துவேன். 13 பிறகுதான், நான் கர்த்தர் என்பதை நீ அறிவாய். உங்களது மரித்த உடல்கள் நரகலான சிலைகளுக்கு முன்னாலும் பலிபீடங்களுக்கு அருகிலும் கிடக்கும்போது நீ அறிவாய். அந்த உடல்கள், உங்களது ஒவ்வொரு வழிபாட்டு இடங்களிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும், ஒவ்வொரு பச்சை மரங்கள் மற்றும் இலைகளுடனுள்ள ஓக் மரங்களின் அடியிலும், கிடக்கும். அந்த இடங்களில் எல்லாம் நீ பலிகளைச் செலுத்தினாய். அங்கே, அவை உன்னுடைய, நரகலான சிலைகளுக்கு இனிய வாசனையை வெளிப்படுத்தியது. 14 ஆனால் ஜனங்களாகிய உங்கள்மேல் என் கரத்தை உயர்த்தி நீங்கள் எங்கு குடியிருந்தாலும் தண்டிப்பேன்! உங்கள் நாட்டை அழிப்பேன்! அது திப்லாத் வனாந்தரத்தைவிட மிகவும் வெறுமையாக இருக்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”
7 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார்: “இப்பொழுது, மனுபுத்திரனே, இதைச் சொல்: எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இச்செய்தி இஸ்ரவேல் நாட்டுக்குரியது!
“முடிவு வந்திருக்கிறது.
நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
3 இப்பொழுது உன் முடிவு வந்துகொண்டிருக்கிறது!
நான் உன் மீது எவ்வளவு கோபத்தோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.
நீ செய்த பயங்கரமானவற்றுக்கெல்லாம் உன்னை விலை கொடுக்கும்படிச் செய்வேன்.
4 நான் உன்னிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்.
நான் உனக்காக வருத்தப்படமாட்டேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிக்கிறேன்.
நீ அத்தகைய பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறாய்.
இப்பொழுது நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்! 6 முடிவு வருகிறது, அது விரைவில் நிகழும்! 7 இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும் மேலும் அதிகரிக்கிறது. 8 இப்பொழுது மிக விரைவில் நான் எனது கோபத்தைக் காட்டுவேன். உனக்கு எதிரான எனது கோபம் முழுவதையும் நான் காட்டுவேன். நீ செய்த தீயவற்றுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கர செயலுக்காக விலை கொடுக்கச் செய்வேன். 9 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீங்கள் அத்தகைய பயங்கரங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை அடிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
10 “ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பதுபோல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட அரசனான நேபுகாத்நேச்சார் ஏற்கெனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான். 11 மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.
12 “அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். 13 தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.
14 “அவர்கள் ஜனங்களை எச்சரிக்க எக்காளத்தை ஊதுவார்கள். ஜனங்கள் போருக்குத் தயாராவார்கள். ஆனால் அவர்கள் போர் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கூட்டத்தின் மேல் நான் எவ்வளவு கோபங்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். 15 பகைவன் தனது வாளோடு நகரத்திற்கு வெளியே இருக்கிறான். நோயும் பசியும் நகரத்திற்குள்ளே இருக்கின்றன. ஒருவன் நகரத்திற்கு வெளியே போனால் பகைவரின் போர்வீரன் கொல்வான். அவன் நகரில் தங்கினால் பசியும் நோயும் அவனை அழிக்கும்.
16 “ஆனால் சில ஜனங்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் மலைகளுக்கு ஓடுவார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் தமது அனைத்து பாவங்களுக்காகவும் வருந்துவார்கள். அவர்கள் அழுவார்கள். புறாக்களைப் போன்ற துயர ஒலிகளை எழுப்புவார்கள். 17 ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும். 18 அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள். 19 அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.
20 “அந்த ஜனங்கள் தம் அழகான நகைகளைப் பயன்படுத்தி ஒரு சிலையைச் செய்தனர். அவர்கள் அச்சிலைக்காகப் பெருமைப்பட்டனர். அவர்கள் தமது வெறுக்கத் தக்க சிலைகளைச் செய்தனர்! அவர்கள் நரகலான அவற்றைச் செய்தனர். எனவே நான் (தேவன்) அவர்களை அழுக்கு நிறைந்த கந்தையைப்போல் வெளியே எறிவேன். 21 அவர்களை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்படி அனுமதிப்பேன். அந்நியர்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். அந்த அந்நியர்கள் சில ஜனங்களைக் கொன்று மற்றவர்களைக் கைதிகளாகச் சிறைபிடிப்பார்கள். 22 அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.
23 “சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும். 24 நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்.
25 “ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது. 26 நீங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் துன்பக் கதைகளைக் கேட்பீர்கள். நீங்கள் கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் தீர்க்கதரிசியைத் தேடி அவனிடம் தரிசனம் பற்றி கேட்பீர்கள், ஆனால் அது கிடைக்காது. ஆசாரியர்களிடம் உங்களுக்குக் கற்றுத்தர எதுவும் இருக்காது. மூப்பர்களிடம் உங்களுக்கு ஆலோசனை சொல்ல எதுவும் இருக்காது. 27 உங்கள் அரசன் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுதுகொண்டிருப்பான். தலைவர் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் மிகவும் பயந்து போயிருப்பார்கள். ஏனென்றால், நான் அவர்களுடைய தீயசெயல்களுக்கு ஏற்றவண்ணம் திருப்பிக்கொடுப்பேன். அவர்களுக்குரிய தண்டனையை நான் தீர்மானிப்பேன். நான் அவர்களைத் தண்டிப்பேன். பிறகு அந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.”
இயேசுவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோம்
12 நம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்களைப்போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும். நம் முயற்சியில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது. நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும். 2 நாம் இயேசுவை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்ற வேண்டும். நம் விசுவாசத்தின் தலைவரே இயேசுதான். நம் விசுவாசத்தை அவர் முழுமையாக்குகிறார். அவர் சிலுவையில் துன்புற்று மரணம் அடைந்தார். ஆனால் சிலுவையின் அவமானத்தைப் பொருட்படுத்தாமல் சிலுவையின் துன்பங்களை அவர் ஏற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு முன்னால் வைக்கப்போகிற மகிழ்ச்சிக்காகவே இத்தனையையும் ஏற்றுக்கொண்டார். எனவே இப்போது அவர் தேவனுடைய வலது புறத்தில் வீற்றிருக்கிறார். 3 இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.
தேவன் பிதாவைப் போன்றவர்
4 நீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை. 5 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்.
“என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே.
அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே.
6 தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார்.
தம் மக்களாக ஏற்றுக்கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார்.” (A)
7 எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் மகனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 8 நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள். 9 இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. 10 உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம். 11 எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை! ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
எவ்வாறு வாழ்வது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்
12 நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள். 13 சரியான வழியில் நடவுங்கள், அப்போதுதான் இரட்சிக்கப்படுவீர்கள். உங்கள் பலவீனம் எந்த இழப்புக்கும் காரணமாகக் கூடாது.
14 எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது. 15 ஒருவனும் தேவனுடைய கிருபையைத் தவறவிடாதபடிக்கும் மக்களுக்கு விஷமூட்ட வளரும் விஷ வேரைப் போல உங்கள் குழுவுக்கு யாராலும் தொல்லை வராதபடிக்கும் உறுதி செய்யுங்கள். 16 எவரும் பாலியல் பாவத்தைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருங்கள். எவரும் ஏசாவைப்போல் ஆகாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏசா தன் குடும்பத்தின் மூத்த மகன். தன் தந்தையின் சொத்தில் அவனுக்கு இரட்டைப் பங்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஏசா தன் வாரிசுரிமையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒரு வேளை உணவுக்காக அவற்றை விற்றுவிட்டான். 17 பிறகு ஏசா ஆசியைப்பெற விரும்பிய போதிலும், கண்ணீர்விட்டுக் கதறிக் கெஞ்சினாலும் கூட அவனால் அதைப் பெற முடியவில்லை.ஏனெனில் மனமாறுதலுக்கு வழி காணாமல் போனான்.
18 நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. 19 எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20 ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” [a]என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. 21 “நான் பயத்தால் நடுங்குகிறேன்” [b]என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
22 ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். 23 இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. 24 இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.
25 எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். 26 அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” [c]என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். 27 “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.
28 அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். 29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.
2008 by World Bible Translation Center