Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 17-19

17 என் ஆவி நொறுங்கிப்போயிற்று
    நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன்.
என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது.
    கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
ஜனங்கள் என்னைச் சூழ்ந்து நின்று, என்னைப் பார்த்து நகைக்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் கேலிச்செய்து, அவமானப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“தேவனே, நீர் என்னை ஆதரிக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும்.
    வேறெவரும் என்னை ஆதரிக்கமாட்டார்கள்.
நீர் என் நண்பர்களின் மனத்தை மூடி வைத்திருக்கிறீர்,
    அவர்கள் என்னை புரிந்துக்கொள்ளார்கள்.
    தயவுசெய்து அவர்கள் வெற்றியடையாதபடிச் செய்யும்.
ஜனங்கள் கூறுவதை நீர் அறிவீர்:
    ‘ஒருவன் அவனது நண்பர்களுக்கு உதவுவதற்காகத் தன் பிள்ளைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டான்’
    ஆனால் என் நண்பர்களோ எனக்கெதிராகத் திரும் பியிருக்கிறார்கள்.
எல்லோருக்கும் ஒரு கெட்ட சொல்லாக, தேவன் என் பெயரை மாற்றியிருக்கிறார்.
    ஜனங்கள் என் முகத்தில் உமிழ்கிறார்கள்.
என் கண்கள் குருடாகும் நிலையில் உள்ளன ஏனெனில், நான் மிகுந்த துக்கமும் வேதனையும் உள்ளவன்.
    என் உடம்பு முழுவதும் ஒரு நிழலைப் போல மெலிந்துவிட்டது.
நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
    தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.
ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.
    களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.

10 “ஆனால் நீங்கள் எல்லோரும் வாருங்கள், இது எனது தவறால் விளைந்ததே எனக் காட்ட முயலுங்கள்.
    உங்களில் ஒருவரும் ஞானமுடையவன் அல்லன்.
11 என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன.
    என் நம்பிக்கை போயிற்று.
12 ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
    அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள்.
    அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.

13 “கல்லறையே என் புது வீடாகும் என நான் எதிர்பார்க்கலாம்.
    இருண்ட கல்லறையில் என் படுக்கையை விரிக்கலாம் என நான் எதிர்பார்க்கலாம்.
14 நான் கல்லறையிடம், ‘நீயே என் தந்தை’ என்றும்,
    புழுக்களிடம் ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம்.
15 ஆனால் அதுவே என் ஒரே நம்பிக்கையாயிருந்தால், அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை!
    அதுவே என் ஒரே நம்பிக்கையாக இருந்தால், அந்த நம்பிக்கை நிறைவுப்பெறுவதை காண்பவர் யார்?
16 என் நம்பிக்கை என்னோடு மறையுமோ?
    அது மரணத்தின் இடத்திற்குக் கீழே போகுமா?
    நாம் ஒருமித்துத் துகளில் இறங்குவோமா?” என்றான்.

பில்தாத் யோபுவுக்குப் பதில் கூறுகிறான்

18 சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:

“யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்?
    அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்).
நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?
யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது.
    உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா?
    உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா?

“ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும்.
    அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும்.
வீட்டின் ஒளி இருளாகும்.
    அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும்.
அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது.
    ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான்.
    அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும்.
அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும்.
    அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான்.
அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும்.
    ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும்.
10 தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும்.
    அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும்.
11 சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்.
    அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும்.
12 கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும்.
    அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும்.
13 கொடிய நோய் அவனது தோலை அரிக்கும்.
    அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும்.
14 தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான்.
    பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான்.
15 அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது.
    ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும்.
16 கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும்,
    மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும்.
17 பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள்.
    ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.
18 ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள்.
    அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள்.
19 அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது.
    அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள்.
20 மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள்.
    கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள்.
21 தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும்.
    தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான்.

யோபு பதில் கூறுகிறான்

19 அப்போது யோபு பதிலாக:

“எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி,
    உங்கள் வார்த்தைகளால் என்னை உடைப்பீர்கள்?
நீங்கள் இப்போது என்னைப் பத்துமுறை இழிவுப்படுத்தியிருக்கிறீர்கள்.
    நீங்கள் என்னைத் தாக்கும்போது வெட்கமடையவில்லை.
நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும்.
    அது உங்களைத் துன்புறுத்தாது.
என்னைக் காட்டிலும் உங்களைச் சிறந்தவர்களாகக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்கள்.
    என் தொல்லைகள் என் சொந்தத் தவறுகளால் நேர்ந்தவை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார்.
    என்னைப் பிடிப்பதற்கு அவர் ஒரு கண்ணியை வைத்தார்.
‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை.
    நான் உரக்க உதவிக்காகக் கூப்பிட்டாலும், நியாயத்திற்காக வேண்டும் என் குரலை ஒருவரும் கேட்கவில்லை.
தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை.
    அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார்.
தேவன் என் பெருமையை எடுத்துப்போட்டார்.
    அவர் என் தலையின் கிரீடத்தை (முடியை) எடுத்தார்.
10 தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார்.
    வேரோடு வீழ்ந்த மரத்தைப்போன்று அவர் என் நம்பிக்கையை அகற்றினார்.
11 தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது.
    அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார்.
12 தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார்.
    என்னைத் தாக்குவதற்கு என்னைச் சுற்றிலும் கோபுரங்களை எழுப்புகிறார்கள்.
    என் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

13 “என் சகோதரர்கள் என்னை வெறுக்கும்படி தேவன் செய்தார்.
    என் நண்பர்களுக்கு நான் ஒரு அந்நியனானேன்.
14 என் உறவினர்கள் என்னை விட்டு சென்றார்கள்.
    என் நண்பர்கள் என்னை மறந்துப்போனார்கள்.
15 என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும்
    என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள்.
16 நான் என் பணியாளைக் கூப்பிடும்போது, அவன் பதில் தருவதில்லை.
    நான் உதவிக்காகக் கெஞ்சும்போதும் என் பணியாள் பதில் தரமாட்டான்.
17 என் மனைவி என் மூச்சின் வாசனையை வெறுக்கிறாள்.
    என் சொந்த சகோதரர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
18 சிறு குழந்தைகளும் என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
    நான் அவர்கள் அருகே வரும்போது அவர்கள் கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
19 என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
    நான் நேசிக்கும் ஜனங்கள் கூட எனக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.

20 “நான் மிகவும் மெலிந்துபோனேன்.
    என் தோல் எலும்போடு ஒட்டித் தொங்குகிறது.
    எனக்குச் சற்றே உயிர் மீந்திருக்கிறது.

21 “என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்!
    எனக்கு இரங்குங்கள்!
    ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
22 தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்?
    என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா?

23 “நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா?
    என விரும்புகிறேன்.
என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா?
    என விரும்புகிறேன்.
24 நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி
    ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன்.
25 என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!
    முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்!
26 நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும்,
    பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்!
27 என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்!
    நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்!
    நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது.

28 “நீங்கள், ‘நாம் யோபுவைத் துன்புறுத்துவோம்.
    அவனைக் குற்றம்சாட்ட ஒரு காரணத்தைக் காண்போம்’ என்று கூறலாம்.
29 ஆனால் நீங்களே அஞ்சுவீர்கள்.
    ஏனெனில், தேவன் குற்றவாளிகளைத் தண்டிக்கிறார்.
தேவன் வாளைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிப்பார்.
    அப்போது நியாந்தீர்க்கும் காலம் ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றான்.

அப்போஸ்தலர் 10:1-23

பேதுருவும் கொர்நேலியுவும்

10 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.

கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.

தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.

மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. 10 பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. 11 திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. 12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. 13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.

14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.

15 ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. 16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

17 இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். 18 அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.

19 பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 20 எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். 21 எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.

22 அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். 23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.

மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center