Old/New Testament
சோப்பார் யோபுவிடம் பேசுகிறான்
11 அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.
2 “இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்!
இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை?
3 யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா?
நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா?
4 யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை,
நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய்.
5 யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி,
நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன்.
6 தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும்.
ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார்.
தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை.
7 “யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா?
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ?
8 அது பரலோகத்திற்கும் உயர்ந்தது.
மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது.
அதுபற்றி நீர் அறியக்கூடுமோ?
9 தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது.
பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது.
10 “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால்,
ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது.
11 உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார்.
தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார்.
12 ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது.
மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான்.
13 ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும்.
உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.
14 உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும்.
உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே.
15 அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும்.
நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும்.
16 அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும்.
வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும்.
17 நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.
வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.
18 அப்போது நீ பாதுகாவலை உணர்வாய்.
ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு.
தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார்.
19 நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள்.
பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள்.
20 தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது.
அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான்.
யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான்
12 பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,
2 “நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.
3 நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல.
இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?
4 “என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள்.
உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.
5 தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.
6 ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.
7 “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.
8 அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
9 கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
10 வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
11 நாவு உணவைச் சுவைப்பதுப்போல
காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.
12 முதிர்ந்தோர் ஞானவான்கள்,
புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
13 ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.
14 தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.
15 தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.
16 தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.
17 தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
18 அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.
19 தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.
20 நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார்.
21 தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார்.
22 இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
23 தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
பின்பு அவர் அவற்றை அழிக்கிறார்.
அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார்,
பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
24 தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார்.
25 அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.
குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான்.
13 யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன்.
நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன்.
2 உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன்.
நானும் உங்களைப் போலவே புத்திசாலி.
3 ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை.
சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன்.
என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன்.
4 ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள்.
ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள்.
5 நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.
6 “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள்.
நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள்.
7 நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா?
நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
8 எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா?
தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா?
9 உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா?
நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா?
10 ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால்,
தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
11 தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது.
நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
12 உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை.
உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.
13 “அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்!
பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
14 நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி
என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.
15 தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன்.
அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.
16 தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும்.
தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
17 நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள்.
நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.
18 நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன்.
எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன்.
நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.
19 நான் தவறென யாரேனும் நிரூபித்தால்
உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்)
20 “தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும்,
அப்போது உம்மிடமிருந்து ஒளிந்திருக்கமாட்டேன்.
21 என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்,
பயங்கரங்களால் என்னை அச்சுறுத்துவதை நிறுத்தும்.
22 பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன்.
அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும்.
23 நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்?
நான் என்ன தவறு செய்தேன்?
என் பாவங்களையும் எனது தவறுகளையும் எனக்குக் காட்டும்.
24 தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்?
ஏன் உமது பகைவனைப்போல் என்னை நடத்துகிறீர்?
25 என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா?
நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமேயாவேன்.
ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர்.
26 தேவனே, எனக்கெதிராகக் கசப்பானவற்றைக் கூறுகிறீர்.
நான் இளமையில் செய்த பாவங்களுக்காக என்னை துன்புறச் செய்கிறீரா?
27 என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர்.
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.
எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர்.
28 அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும்,
அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்” என்றான்.
சவுல் மனம் மாறுதல்
9 சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். 2 தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.
3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.
5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.
7 சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. 8 சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். 9 மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.
10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.
அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.
13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.
15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.
17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.
சவுல் தமஸ்குவில் போதித்தல்
சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.
21 சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.
2008 by World Bible Translation Center